இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சி மடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம்: மீனவர்களை மீட்டு தர கோரி மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் மற்றும் சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் இன்று வியாழக்கிழமை(3) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக மீட்டு தர கோரி மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை மீன் பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 17 மீனவர்கள் உட்பட முன்னதாக சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள சுமார் 150-க்கும் மேற்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், இலங்கை கடற்படை வசமுள்ள நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 175 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகள் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி இன்று காலை முதல் தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் விசைப்படகு மீனவர்கள் மற்றும் சிறையில் உள்ள மீனவர்கள் உறவினர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வயிற்று பிழைப்புக்காக மீன்பிடிக்க சென்ற மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.
இதனிடையே மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று மூன்றாவது நாளாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment