பிரித்தானிய தடை ஒரு அரசியல் நாடகம் ; விநாயகமூர்த்தி முரளீதரன்
கிழக்கு தமிழ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதையடுத்து எனக்கு பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்தமை ஒரு அரசியல் நாடகம் என முன்னாள் பிரதி அமைச்சரான விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார்.
கிழக்கு தமிழர் கூட்டணியின் கல்குடா தொகுதிக்கான வேட்பாளர் அறிமுக விழா இன்று (27) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் அங்கு மேலும் கூறுகையில்,
நாங்கள் என்ன பிச்சை எடுக்கப்போறோமா?
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை ஒரு முக்கியமான தேர்தலாக பார்க்கின்றோம். முக்கியமாக முதல் முறையாக ஓர் அணியாக திரண்டு ஒரு கூட்டாக களமிறங்கியுள்ளோம்.
ஆகவே, ஒவ்வொரு வேட்பாளரும் வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயற்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோளாகும். தற்போது கிழக்கு தமிழ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பிறகு இதனை பொறுத்துக்கொள்ள முடியாத பலர் கலக்கமடைந்துள்ளதுடன் இவ்வளவு காலமும் இல்லாத எதிர்ப்பு உருவாகி கொதித்துக்கொள்கின்றனர்.
புலம்பெயர்ந்து வாழ்கின்ற படித்தவர்கள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள் சிந்திப்பதில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பை முதலில் தோற்கடிக்க வேண்டும். அவர்கள் போலி தேசியத்தை பேசிக்கொண்டு மக்களை ஏமாற்றி இலஞ்சம் ஊழல் எல்லாவற்றையும் செய்கின்றனர்.
உண்மையில் போராளிகளாக இருந்தவர்கள், மாவீரர் குடும்பங்களாக இருந்து வந்தவர்கள் தான் எங்கள் மக்களை ஆளவேண்டும். அவர்களுக்குத் தான் இந்த உரிமையும் மக்களை நடத்தும் திறமையும் இருக்கின்றது.
நாங்கள் கூட்டமைப்பை உருவாக்கியது உலகம் முழுக்க பேசும் பொருளாக பார்க்கப்படுகிறது. அண்மையில் பிரித்தானியா அரசாங்கம் கருணா அம்மானாகிய எனக்கு தடை விதித்தது. நாங்கள் என்ன பிச்சை எடுக்கப்போறோமா?
இவ்வளவு நாளும் இல்லாத தடை எதற்காக இப்போது விதிக்கின்றனர்? இது ஒரு அரசியலுக்கான நாடகம் தான் என்றார். பிரித்தானிய அரசாங்கத்தால் நான் 2006இல் கைது செய்யப்பட்டு அங்கு சிறைச்சாலையில் 8 மாதங்கள் இருந்தேன்.
ஆனால், அரச மரியாதையுடன் கட்டுநாயக்க விமான நிலையம் வரை என்னை பாதுகாப்புடன் கொண்டு வந்தார்கள். அப்படிப்பட்ட பிரித்தானிய அரசாங்கத்துக்கு, இப்பத்தான் கருணா அம்மான் பிழை விட்டுள்ளார் என்று தெரிகிறது.
ஆகவே, இதுவெல்லாம் கிழக்கு தமிழர்களுடைய இருப்பை சூறையாடுவதற்கான நடவடிக்கையாகும்.
கிழக்கு மாகாண சபையை நாங்கள் கைப்பற்றுவோம். கிழக்கு மாகாண சபையை தவறவிடுவோமாக இருந்தால் முஸ்லிம் தலைவர்களுடைய ஆதிக்கம் வளர்ச்சியடைந்து தமிழர்களுடைய நிலப் பிரதேசங்கள் குட்டிச்சுவராகி இருப்பே கேள்விக்குறியாகும் என்றார்.
Reviewed by Vijithan
on
March 27, 2025
Rating:


No comments:
Post a Comment