ஊடகத்துறையின் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் மன்னார் மாவட்டத்தின் விடத்தல் தீவைச் சேர்ந்த கிரிஜா அருள்பிரகாசத்திற்கு
ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ்வாண்டு மாணவி கிரிஜா அருள்பிரகாசத்திற்கு வழங்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பட்டமளிப்பு விழா 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான 4 நாட்கள் நடைபெறுகின்றது.
03ஆம் நாளான நேற்று (21) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையில் ஊடகவியலில் திறமைச் சித்தி பெற்ற மாணவியான மன்னார் மாவட்டத்தின் விடத்தல் தீவைச் சேர்ந்த சேர்ந்த கிரிஜா அருள்பிரகாசத்திற்கு இப்பதக்கம் வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் பயிற்சி மையத்தில் ஊடக மாணவனாகப் படித்துக் கொண்டு ஊடகவியலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நிலக்சன் 2007ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி இராணுவ ஊரடங்கு வேளையில் அதிகாலை 5.00 மணியளவில் அவரது வீட்டில் வைத்து பெற்றோர் முன்னிலையில் ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
நிலக்சனது ஞாபகார்த்தமாக அவரது பாடசாலை நண்பர்களான யாழ். இந்துக்கல்லூரியின் 2004 உயர்தர மாணவர்களால் முன்னெடுக்கப்படும் “நிலா நிதியம்” யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தங்கப்பதக்கத்தை சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
இந்நிதியத்தின் அங்குரார்ப்பண சான்றிதழ் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தலின் போது யாழ். பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியிடம் கையளிக்கப்பட்டு பின்னர் யாழ். பல்கலைக்கழகத்திடம் நிதி கையளிக்கப்பட்டது.
இதன்மூலம் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் கடந்த 06 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றது.
கடந்த ஆண்டு இரத்தினபுரி (Ratnapura) மாவட்டத்தில் கொழும்புகாமம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணராஜா செல்வி பெற்றுக் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment