இறந்ததாக கருதப்பட்ட தமிழர் 25 வருடத்தின் பின்னர் வீடு திரும்பினார்!
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் இறந்து விட்டதாக கருதப்பட்ட நிலையில் 25 வருடங்களுக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
யாழ்ப்பாணம் சுன்னாகத்தை சேர்ந்த எஸ்.வைரவநாதன் என்பவரே இவ்வாறு வீடு திரும்பியவாரார்.
1990ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து ஆமர் வீதியில் வைத்து சந்தேகத்தின் பேரில் வைரவநாதன் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 25.
இதன்பின்னர் அவர் காணாமல் போனவர் என்ற அடிப்படையில் தேடப்பட்டு பின்னர் இறந்து விட்டதாகவே கருதப்பட்டார்.
இந்தக்காலத்துக்குள் வைரவநாதனின் பெற்றோர் இருவரும் காலமாகி விட்டனர்.
கடந்த மாதம் ஹம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் ஹம்பாந்தோட்டை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வைரவநாதன், விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை பொறுப்பேற்குமாறும் கேட்கப்பட்டிருந்தது. எனினும் அவரின் உறவினர்கள், வைரவநாதனை பொறுப்பேற்க ஹம்பாந்தோட்டைக்கு செல்லவில்லை.
கொழும்பின் ஆங்கில இதழ் ஒன்றின் தகவல்படி, வைரவநாதன் இறந்துவிட்டார் என்று கருதி போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அவரின் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வைரவநாதனின் மற்றுமொரு உறவினர் ஹம்பாந்தோட்டைக்கு சென்று வைரவநாதனை பொறுப்பேற்றுள்ளார். அவரை கடந்த வியாழக்கிழமை ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இறந்ததாக கருதப்பட்ட தமிழர் 25 வருடத்தின் பின்னர் வீடு திரும்பினார்!
Reviewed by NEWMANNAR
on
December 14, 2014
Rating:

No comments:
Post a Comment