

யாழ்.குடாநாட்டில் முன்னெடுக்கப்படவிருக்கும் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்றது.
யாழ் பொதுநூலக வளாகத்தில் அமைந்துள்ள வடமாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
இரணைமடுக் குளத்தில் இருந்து யாழ் குடாநாட்டுக்குத் தண்ணீரை விநியோகிப்பதில் எழக்கூடிய பல்வேறு பிரச்சினைகளையும் கருத்திற் கொண்டு, வடமாகாண சபை குடாநாட்டுக்கான குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான மாற்று யோசனையாகக் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை முன்வைத்திருந்தது.
இத்திட்டத்தை ஆசிய அபிவிருத்தி வங்கியும் இலங்கை தேசிய நீர் வழங்கல் வடிகால் சபையும் ஏற்றுக் கொண்டு, கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலையை அமைப்பதற்கான இடமாக மருதங்கேணி தேர்வு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், மருதங்கேணிக் கடற்பரப்பில் இருந்து கடல் நீரைப் பெற்றுக் குடிநீராக்கும் திட்டத்தால் மீன்பிடித் தொழிலுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று சிலரால் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்தே, இதுதொடர்பாக விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன், மாகாண சபை அமைச்சர்கள் பொ.ஐங்கரநேசன், பா.சத்தியலிங்கம், த.குருகுலராஜா, மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், ஆசிய அபிவிருத்தி வங்கியின் உயர் அதிகாரிகள், தேசிய நீர் வழங்கல் வடிகால் சபையினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
இதன்போது அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த, கடல் நீரைக் குடிநீராக்கும் திட்ட நிபுணர் நிக்கோலாய் கலந்து கொண்டு திட்டம் தொடர்பாக விளக்கம் அளித்ததோடு கேள்விகளுக்குப் பதில்களையும் வழங்கியிருந்தார்.
இவ்விசேட கலந்துரையாடலின் முடிவில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்,
இரணைமடுக் குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிநீரை எடுத்து வரும் திட்டம் கைவிடப்பட்டு, யாழ்ப்பாணத்துக்கான குடிநீர்த் தேவையின் ஒரு பகுதியைக் கடல் நீரை நன்னீராக்கப் பெறுவது என்ற திட்டம் எம்மால் முன்மொழியப்பட்டு உரிய தரப்புகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டும் உள்ளது.
ஆனால், இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிநீரை எடுத்துவரும் பழைய திட்டத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று கருதுகின்ற சிலர் இன்னமும் உள்ளனர்.
அவர்களின் பின்னணியில்தான் மருதங்கேணியில் அமைய இருக்கும் கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலையால் மீன்பிடித் தொழிலுக்குப் பாதிப்பு என்ற கருத்து திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருகிறது.
கலந்துரையாடலில் பங்கேற்ற நிபுணர் நிக்கோலாய் மீன்பிடித் தொழிலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் மாறாக, இப்பகுதியில் புதிய மீன் இனங்கள் பெருகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற கலந்துரையாடல் மருதங்கேணியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்களின் மத்தியிலும் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment