
17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர் மைதானத்திற்குள் இருந்த போது மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர் அவருடன் செல்பி எடுக்க முயன்றதால் ரோஜர் பெடரர் கோபமடைந்துள்ளார்.
பரபரப்பாக நடைபெற்று வரும் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியில் நேற்று ரோஜர் பெடரர் - அலெஜாண்ட்ரோ பல்லா இருவரும் மோதினர். இப்போட்டியில் பெடரர் 6-3, 6-3, 6-4 என்ற செட் கணக்குகளில் அலெஜாண்ட்ரோவை வெற்றி கொண்டார்.
இந்நிலையில் போட்டி முடிவடைந்ததும், இளம் ரசிகர் ஒருவர் பாதுகாப்பையெல்லாம் மீறி, பெடரர் அருகில் சென்றார். திடீரென அந்த ரசிகர் பெடரருடன் செல்பி எடுக்க முயன்றார். இது, போட்டி முடிந்த களைப்பில் இருந்த பெடரருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் பெடரர் கடும் அதிருப்தி அடைந்தார்.
இதுகுறித்து அவர் கருத்து தெரிவித்த போது, 'இந்த சம்பவம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. நேற்று ( நேற்று முன்தினம் )பயிற்சியின்போதும் இதேபோன்று சம்பவம் ஒன்று நடைபெற்றது. முதலில் ஒரு சிறுவன் வந்தான். பின் நான்கைந்து பேர் வந்து விட்டனர்.
இன்று (நேற்று), ரசிகர்கள் யாரும் எளிதில் நுழைய முடியாத பிரதான மைதானத்துக்குள் ஒருவர் அத்துமீறி வந்து விட்டார். அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை எனினும், நடந்தது எனக்கு திருப்தி அளிக்கவில்லை' என்றார்.
இந்த சம்பவத்தால் கடும் விமர்சனத்துக்கு உள்ளான போட்டி ஏற்பாட்டாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை தற்போது மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment