அண்மைய செய்திகள்

recent
-

அர்ப்பண வாழ்வில் 60 ஆண்டுகளைக் கடந்த அமலித் தாயார்.-Photos



தனது துறவற வாழ்வின் 60 வது ஆண்டைக் கடந்து இறைவனுக்கான தனது பணிவாழ்வைத் தொடர்ந்து கொண்டு இருக்கின்றார் எமது அமலித் தாய் அவர்கள். முத்துக் குளிக்கும் இடமாம் முத்தரிப்புத்துறையில் பிறந்து தனது பணிவாழ்வை பல பங்குகளில் சிறப்பான முறையில் ஆற்றிவரும் இவரின் அர்ப்பண வாழ்வின் 60 வது ஆண்டுக் கொண்டாட்டம் தற்பொழுது பணிபுரிந்து வரும் தலைமன்னார் பங்கில் 18.07.2015 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.


தனது பணிவாழ்வில் மன்னார் மாவட்டம் மற்றும் யாழ்ப்பான மறை மாவட்டங்களிலும் தனது பணி வாழ்வை எம் தாயார் மேற் கொண்டமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் இவர் குடும்பப் பணிமனையில் 6 ஆண்டுகளுக்கு மேலாக திருமண ஆயத்த வகுப்புகள் மற்றும் பங்குப் பணிவாழ்வில் முதியோர் சந்திப்பு நற்கருணை வழங்குதல் வழிபாடுகளை ஆயத்தம் செய்தல் குடும்பத்தரிசிப்புகள் திருவருட்சாதன ஆயத்தங்கள் இளைஞர்களுக்கான ஆலோசனைகளை வழங்குதல் போன்றவற்றை இவர் தமது பங்குப் பணிவாழ்வில் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இவரின் அர்ப்பண வாழ்வின் 60 வது ஆண்டு கொண்டாட்டமானது.; காலை 10.30 மணியளவில் தலைமன்னார் புனித லோறன்சியார் தேவாலயத்தில் கிராம மக்களின் வழக்கப்படி மாலை அணிவித்து ஆராத்தியெடுத்து வருகைப் பாடலுடன் ஆரம்பமானது. இத்திருப்பலியை எமது மன்னார் மாவட்ட குரு முதல்வர் அருட். தந்தை விக்டர் சோசை அடிகளார் முன்னால் குரு முதல்வர் சேவியர் குருஸ் அடிகளார் அருட்.தந்தை மங்கலராஜ் அடிகளார்இ பங்கின் பங்குத் தந்தை நவரட்ணம் அடிகளார் எமது கிராமத்தின் குருவானவர் அருட்.தந்தை. ஜெயராஜா கூஞ்ஞ மற்றும் இன்னும் பல குருக்கள் கன்னியர்களின் ஒருங்கிணைப்பில் திருப்பலி ஆரம்பமானது இதில் 40க்கு மேற்பட்ட குருக்கள் கன்னியர்கள் பங்கு கொண்டதுடன். அமலித் தாயாரின் சொந்த இடமான முத்தரிப்புத்துறை மக்களும் பேசாலை பங்கு மக்களும் இதில் பங்கு கொண்டு இந்நாளை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


18.07.2015 அன்று திருப்பலி நிறைவுற்றதும். ஆலய மேய்ப்புப்பணியின் பொருளாளர் திரு.வெ.அன்ரன் றெஜினோல்ட் பீரிஸ் அவர்களின் தலைமையில் சில நிகழ்வுகள் இடம் பெற்றது. இதில் முதலாவது நன்றி உரையினை இவருடைய சேவைக்காக எமது குரு முதல்வர் விக்டர் சோசை அடிகளார் வழங்கினார். தொடர்ந்து; இவருடைய பணிவாழ்வுக்கான நன்றி உரையுடன் அன்பளிப்புகளை தலைமன்னார் முதியோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஆலய மேய்ப்புப்பணி உறுப்பினர்களும் வழங்கியமையுடன். பேசாலைப் பங்கு மக்கள் அமலித் தாயாருக்காக ஒரு அருமையான நினைவுப் பாடலைப் பாடியமையுடன் நினைவுச் சின்னம் ஒன்றினையும் வழங்கியமையுடன். முத்தறிப்புத்துறை மக்களும் தமது நன்றியைத் தெரிவித்து நின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அமலித் தாயாரின் நன்றியுரை இடம்பெற்றது. நன்றி உரையில் குறிப்பாக மன்னார் குரு முதல்வர் அவர்கள் திருப்பலி நிறைவேற்றியமைக்கும் தமது பணிவாழ்வில் 6 வருடங்கள் குடும்பப்பணி வாழ்வில்தான் முன்னோக்கி செல்ல அவர் வழங்கிய ஆலோசனைகளுக்காகவும் வவுனியால் தான் நடாத்தி வந்த ஏழைச் சிறுவர்களின் காப்பகத்திற்கு வழங்கிய உதவிகளுக்காகவும் நன்றி தெரிவித்தார்.

அடுத்ததாக மாகாணத் தலைவி மற்றும் தலைவியின் ஆலோசகர்களுக்கும் அவர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கும் அவர் நன்றி தெரிவித்தார். இங்கு வந்திருக்கும் அருட்.தந்தையருக்கும் அவர்கள் தன்னை அமலித் தாயார் என்று அன்புடன் அழைத்தமைக்கும் தான் மனக்கவலையில் இருக்கின்ற வேளைகளில் இவர்கள் வழங்கிய ஆலோசனைகளுக்காகவும் நன்றி தெரிவித்தார்.

அடுத்து எமது பங்குத் தந்தை நவரட்ணம் அடிகளாருக்கு இவ் விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்தமைக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து தலைமன்னார் பங்குச்சபை பங்கு மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தமையுடன் எங்கே ஒற்றுமையுண்டோ அங்கே பலம் உண்டு என்று பங்கு மக்களுக்கு தனது செய்தியையும் அவர் கூறினார். அத்தோடு தலைமன்னார் கிராம வாசிகள் தன்னை தலைமன்னார் முதுசு எனக் கூறுவதையிட்டும் தன்னை இக்கிராமத்தின் பிரஜையாக பார்ப்பதையும் இட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தார். 

இப்பங்கிலே இவர் 10 வருடங்கள் பணியாற்றியவர் என்பதை இங்கே இவர் குறிப்பிட்டமை குறிப்பிடத் தக்கது. அத்துடன் தன்னிடம் கல்வி கற்ற பலர் குருக்களாக இருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைந்தார். குறிப்பாக அருட்.தந்தை பெனோ அடிகளார் மற்றும் அருட்.தந்தை ஜெயராஜா கூஞ்ஞ ஆகியோர் இவரிடம் கல்வி கற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அன்ரன் ரெஜினோல் பீரிஸ் ஆகியோரையும் அவர்கள் தன்னிடம் கல்வி கற்றமையையும் இட்டு மனம் மகிழ்வதாகவும் அவருடைய உரை அமைந்திருந்தது. 

முத்தரிப்புத்துறையில் இருந்து வந்த மக்கள் அவருடைய பழைய மாணவர்கள் மற்றும் பேசாலை பங்கு மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். இந்நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்திருந்தார். குறிப்பாக தலைமன்னார் திருக்குடும்ப கன்னியர் மட அருட்.சகோதரிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து அனைவரும் குளிர்பானம் அருந்திய பின்னர் 12.30 மணியளவில் இவருடைய பழைய மாணவர்கள் இவரை அழைத்து வர கிராம வழங்கப்படி தலைமன்னார் மண்ணின் கவிஞர்களினால் பாடப்பட்ட பாடலுக்கு வாத்திய இசை அமைத்த வன்னமாக பவணியாக மக்கள் திருக்குடும்ப கண்ணியர் மடத்தை நோக்கி நகர்ந்தனர். இங்கு இடம் பெற்ற மதிய விருந்து உபசாரத்துடன் சரியாக 02.30 மணியளவில் நிகழ்வுகள் நிறைவுற்றது.

இந்நிகழ்வில் பங்கு கொண்ட குருக்கள் மற்றும் கன்னியர்களுக்கும் அமலித் தாயாரின் பழைய மாணவர்கள் அவருடைய கிராம மக்கள்  பேசாலை பங்கு மக்கள்  ஆலய மேய்ப்புப்பணிச்சபை உறுப்பினர்கள் எமது பங்குத் தந்தை அருட்.சகோதரிகள் இளைஞர்கள் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் எமது மண்ணின் சங்கித்தம் கவிஞர்கள் முதியோர் சங்கள் உறுப்பினர்கள் மாதர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தலைமன்னார் பங்கு மக்கள் மற்றும் பங்குத் தந்தை அருட்சகோதரிகள் சார்பான நன்றிகளைத் தெரிவித்து நிற்பதோடு அமலித் தாயார் நீண்ட காலம் வாழ வேண்டும் என்றும் வாயார வாழ்த்துகின்றோம்.

நன்றி
இவர்கள்
தலை மன்னார் மக்கள்










அர்ப்பண வாழ்வில் 60 ஆண்டுகளைக் கடந்த அமலித் தாயார்.-Photos Reviewed by NEWMANNAR on July 24, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.