உரிமைகளுடன் கூடிய அபிவிருத்தியே நிரந்தரமானது: வேரவிலில் வேட்பாளர் சி.சிறீதரன்
வேரவில் கலைமகள் விளையாட்டுகழகம் வி.என். ஏற்றுமதி இறக்குமதி தனியார் நிறுவனத்தின் அனுசரணையுடன் நடாத்திய பதினொருபேர் கொண்ட உதை பந்தாட்ட சுற்றுப்போட்டியில் கடந்த பதினெட்டாம் நாள் முன்னைநாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தற்பொழுது இலங்கை தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளருமான சி.சிறீதரன் முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட வீரர்களை வாழ்த்தி உரை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில், மனதுக்கும் உடலுக்கும் ஆராக்கியம் தரும் வகையில் கிராமங்களில் சிந்திக்கும் இத்தகைய நிகழ்வுகள் எமது இளைய சமுதாயத்திற்கு நல்வழியையும் எதிர்காலம் பற்றிய நல்ல சிந்தனையையும் கொடுக்கும்.
நமது கடந்த போர்க்காலங்களில் சிறந்த ஒழுக்கத்துடனும் சீரிய சிந்தனையுடனும் வாழ்ந்திருந்தார்கள். இலட்சிய வேட்கை அவர்களிடம் இருந்தது.
ஆனால் போருக்குப்பிறகு எமது இளம் சமுதாயம் திட்டமிட்டு சமுதாய சீரழிவுக்குள் தள்ளப்பட்டு அவர்களின் பண்பாட்டையும் இலட்சிய வேட்கையையும் அழிப்பதற்கு அன்னிய சக்திகளும் சிங்கள இனவாதிகளும் திட்டமிட்டு ஆற்றிய வேலைகளில் நாம் எமது பகுதிகளில் ஏராளம் சமுகச்சீரழிவுகளை சந்தித்துக்கொண்டிருக்கின்றோம்.
இவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை நமது வடக்கு மகாண சபையிடம் இன்னும் வழங்கப்படவில்லை. பொலிஸ் அதிகாரம் எம்மிடம் இல்லை.காணி அதிகாரம் எம்மிடம் இல்லை. இந்த வீதிகளும் மின்விளக்குகளும் அபிவிருத்திகளும் நிரந்தரமற்ற சுகங்களை தருமே தவிர, எமது பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் கல்வியையும் காக்கப்போவது இல்லை.
ஆகவேதான் முதலில் வடக்கு கிழக்கு இணைந்த நமது தேசத்தில் எமக்கு உரித்தான சுயநிர்ணய உரிமை எமக்கு வழங்கப்பட்டு அதனூடாக மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகள் என்றும் எமது மக்களுக்கு சுபீட்சமும் நிம்மதியும் தரும் வாழக்கையை தரும்.நாம் எம்மை ஆளும் உரிமை என்பது எமது நிரந்தரமான வாழ்வுக்கான அத்திவாரம் போன்றது என தெரிவித்தார்.
இந்த நிகழ்வுகளில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளையும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.
உரிமைகளுடன் கூடிய அபிவிருத்தியே நிரந்தரமானது: வேரவிலில் வேட்பாளர் சி.சிறீதரன்
Reviewed by NEWMANNAR
on
July 24, 2015
Rating:

No comments:
Post a Comment