நல்லாட்சியில் எதிர்க்கட்சித் தலைவருக்கும் விசாரணையா?
நல்லாட்சி அரசாங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் விசாரணையா என மக்கள் கேள்வியெழுப்பியுள்ளார்கள்.
எதிர்க்கட்சித் தலைவருடன் பரவிப்பாஞ்சான் புகதியிலுள்ள பாதுகாப்பு வலயத்திற்கு சென்றவர்களுக்கு விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்து அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தம்மை அழைத்து சென்ற எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
கடந்த வாரம் வட மாகாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் கடந்த சனிக்கிழமை கிளிநொச்சிக்குச் சென்று மக்களைச் சந்தித்து குறை, நிறைகளைக் கேட்டறிந்தார்.
இதன் போது சொந்தக்காணி, வீடுகள் இருந்தும் தற்போதும் அகதிகளாக வாழ்ந்து வருவதாக தெரிவித்த மக்கள் பரவிப்பாஞ்சான் பகுதியிலுள்ள காணிகள் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திலும் தம்மிடம் கையளிக்கப்படாது உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இராணுவக்கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.
அத்துடன், தம்மைத் தமது சொந்தக் காணிகளில் வாழ அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சாள்ஸ் நிர்மலநான் ஆகியோர் பரவிப்பாஞ்சான் பகுதிக்கு மக்களை அழைத்துச் சென்றிருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனைக் கண்ட இராணுவத்தினர் உரிய மரியாதை செலுத்தி அப்பகுதிக்குச் செல்ல அனுமதித்ததுடன், மக்கள் தமது சொந்த வீடுகளைப் பார்வையிட எவ்வித இடையீறுமின்றி அமைதியாக நின்றனர்.
எனினும், தற்போது, பரவிப்பாஞ்சான் பகுதிக்கு எதிர்க்கட்சித் தலைவருடன் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் எதிராக விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவித்து அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்பாதுகாப்பு வலயப் பிரதேசத்திற்குள் அத்துமீறிப் பிரவேசித்தமைக்காகவே இவ்வாறு விசாரணைகள் நடைபெறவுள்ளதாகக் தெரிவித்து அழைப்பாணைக் கடிதங்கள் அனுப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
மக்களது துன்பதுயரங்களை நேரில் கண்ட எதிர்க்கட்சித் தலைவர், அந்த மக்களது சொந்தக் காணிகளுக்கு அழைத்துச் சென்றமை குற்றமாகக் கருதப்பட்டு அவருடன் கூடச் சென்றவர்களுக்கு விசாரணை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பரவிப்பாஞ்சான் பகுதிக்கு அழைத்துச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் இர.சம்பந்தன் அவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்று கூறப்படுகின்றது.
நல்லாட்சியில் எதிர்க்கட்சித் தலைவருக்கும் விசாரணையா?
Reviewed by Author
on
April 20, 2016
Rating:
Reviewed by Author
on
April 20, 2016
Rating:



No comments:
Post a Comment