கழிவு கொட்டப்படும் பகுதிக்கு நேற்றைய தினம் இனந்தெரியாத விசமிகளால் தீ
கல்லுண்டாய் வெளியில் கழிவு கொட்டப்படும் பகுதிக்கு நேற்றைய தினம் இனந்தெரியாத விசமிகளால் தீ மூட்டப்பட்டுள்ளது.இதனால் குறித்த பகுதியில் நேற்றிரவு வரை புகைமூட்டமாக காணப்படுவதுடன் தீயணைப்பு பிரிவினராலும் குறித்த தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
கல்லூண்டாய் வெளியில் யாழ். மாநகர சபையினால் கழிவுகள் கொட்டப்படும் பகுதியில் நேற்றைய தினம் மதியம் முதல் தீப்பற்றி எரிந்தமையினால் வீதியெங்கும் புகைமூட்டமாக காணப்பட்டதுடன் குறித்த பாதைவழியான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.
மேற்படி பகுதியில் ஆபத்தான வகையில் பிளாஸ்ரிக் பொருட்கள் அதிகளவில் எரிந்து கொண்டிருப்பதால் வெளி வரும் வாயுக்கள் வீதி எங்கும் அதை சூழவுள்ள கிராமங்களிலும் பரவிய வண்ணம் உள்ளதாகவும் சுவாசிப்பதற்கு சிரமாக உள்ளதாகவும் அப்பகுதி பொது மக்கள் தெரிவித்துள்ளனர் .
இது தொடர்பாக யாழ்.மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசனை தொடர்பு கொண்டு கேட்டபோது,கல்லுண்டாய் பகுதியில் கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் தீப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்தது. கழிவுகள் எரியூட்டப்படுவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்குறித்த சம்பவத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான காரணத்தை அங்குள்ள பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் இருந்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி கோரியுள்ளேன்.
குறித்த பகுதிக்கு உடனடியாக தீயணைப்பு பிரிவினர் சென்றிருந்தனர். ஆனால் பல மணிநேரம் முயற்சி செய்தும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இன்றைய தினம் தொடர்ச்சியாக தீயணைப்பு பணிகள் இடம்பெறவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்
கழிவு கொட்டப்படும் பகுதிக்கு நேற்றைய தினம் இனந்தெரியாத விசமிகளால் தீ
Reviewed by NEWMANNAR
on
August 14, 2016
Rating:

No comments:
Post a Comment