கூட்டமைப்பு கேள்வி....தொண்டமான், டக்ளசுக்கு வெட்கம் இல்லையா?
வடக்கு, கிழக்கிலும் சிங்கள மொழிக்கே முன்னுரிமை – முதலிடம் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் விமல்வீரவன்ஸ விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் நிலைப்பாடு என்னவென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று சபையில் கேள்வி எழுப்பியது.
அத்துடன், தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தும் வகையில் செயற்படும் விமல்வீரவன்ஸவை கட்டுப்படுத்த முடியாத இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதற்கு வெட்கம் இல்லையா என தமிழ் அமைச்சர்களிடமும், நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கேட்கின்றேன் என்று கூட்டமைப்பு எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் வினாதொடுத்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிர்மாணத்தொழில் அபிவிருத்திச் சட்டத்தின்கீழான ஒழுங்குவிதிகள்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு,
“மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் விமல்வீரவன்ஸ பனந்தும்பு உற்பத்தி நிலையத்தை கடந்த சனிக்கிழமை திறந்துவைத்தார்.
அவர் திரை நீக்கம்செய்த பெயர்ப்பலகையில் தமிழுக்கு முதலிடமும், சிங்களத்துக்கு இரண்டாம் இடமும், ஆங்கிலத்துக்கு மூன்றாம் இடமும் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பெயர் பலகையை மாற்றி, சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
அத்துடன் நின்றுவிடாமல் இலங்கையானது சிங்கள, பௌத்த நாடு என்றும், வடக்கு, கிழக்காக இருந்தாலும் சிங்கள மொழியே முதலில் இருக்கவேண்டும் என்றும் கருத்துரைத்துள்ளார்.அவரின் இந்த கருத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
விமல்வீரவன்ஸவின் இந்த அறிவிப்பு தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் நிலைப்பாடு என்னவென இந்த சபையின் ஊடாக கேட்க விரும்புகின்றேன்.
விமலின் செயற்பாடானது தமிழ் மக்களின் மனதில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசாங்கத்தில் தமிழ் அமைச்சர்களும் (ஆறுமுகன் தொண்டான், டக்ளஸ்) , உறுப்பினர்களும் (வியாழேந்திரன், அங்கஜன்) அங்கம் வகிக்கின்றனர். அவர்களால் விமலை கட்டுப்படுத்தமுடியவில்லை. அரசாங்கமும் கட்டுப்படுத்துவதில்லை. இப்படியான அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது வெட்கம் இல்லையா என கேட்கின்றேன்.” என்றார்.
கூட்டமைப்பு கேள்வி....தொண்டமான், டக்ளசுக்கு வெட்கம் இல்லையா?
Reviewed by Author
on
January 23, 2020
Rating:

No comments:
Post a Comment