தொலைத்தொடர்பு வயர்களுக்கு சேதம் விளைவித்தல்: பொலிஸ் எச்சரிக்கை
நிலவிய சீரற்ற வானிலை காரணமாக சில பகுதிகளில் வெளிப்பட்டுள்ள தொலைத்தொடர்பு வயர்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் அவற்றை வெட்டி அகற்றுவது தொடர்பான தகவல்கள் பதிவாகி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலைமையானது தொலைத்தொடர்பு வசதிகளை விரைவாக வழமைக்கு திருப்புவதற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு வயர்களுக்கு சேதம் விளைவித்தல், அவற்றை வெட்டி அகற்றுதல், தம்வசம் வைத்திருத்தல் அல்லது அதன் கட்டமைப்புகளுக்கு சேதம் விளைவித்தல் போன்றவற்றை செய்ய வேண்டாம் என்றும், இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால், அது குறித்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறியப்படுத்துமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், அனர்த்தங்களுக்கு உள்ளான வீதியொன்றை புனரமைக்கும் சந்தர்ப்பத்தில், இவ்வாறான நிலத்தடி தொலைத்தொடர்பு வயர்கள் தென்பட்டால், அது குறித்து உரிய நிறுவனங்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
Reviewed by Vijithan
on
December 08, 2025
Rating:


No comments:
Post a Comment