கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்: தங்கம் வென்ற தமிழச்சி
அவுஸ்திரேலியாவின் கான்பெராவில் நடந்த வாள் சண்டை போட்டியில், சென்னை வீராங்கனை பவானிதேவி கலந்துகொண்டார். இறுதிப்போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை எமிராக்சை எதிர்கொண்ட பவானிதேவி, அவரை 15-12 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
இதன்மூலம், காமன்வெல்த் வாள் சண்டையில் சீனியர் பிரிவில் பவானிதேவி தங்கம் வென்றார். இந்த பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார்.
இந்நிலையில், பவானிதேவி இன்று அதிகாலை சென்னைக்கு திரும்பினார். அவரை விமான நிலையத்தில் அவரது பெற்றோர், நண்பர்கள், பயிற்சியாளர்கள், வீரர், வீராங்கனைகள் என பலர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து பவானிதேவி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘சர்வதேச போட்டிகளில் வெல்லும் எனது முதல் தங்கப்பதக்கம் ஆகும். எனவே மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
அதோடு மட்டுமின்றி இந்தியாவில் இருந்து ஒருவர் வெல்லும் முதல் தங்கப்பதக்கம் ஆகும். அந்த சாதனையும் எனக்கு கிடைத்துள்ளதால் இரட்டிப்பு மகிழ்ச்சியடைகிறேன். கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு இந்த தங்கப்பதக்கத்தை அர்ப்பணிக்கிறேன்’ என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ‘காமன்வெல்த் தங்கப்பதக்கம் அடுத்த சர்வதேச போட்டிகளில் பங்கேற்க எனக்கு பெரிதும் ஊக்குவிப்பாக உள்ளது. எதிர்வரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என தெரிவித்தார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்: தங்கம் வென்ற தமிழச்சி
Reviewed by Author
on
November 28, 2018
Rating:
No comments:
Post a Comment